Saturday, August 30, 2008

இனமும் மொழியும் இரு கண்கள்; இல்லாவிட்டால் வெறும் புண்கள்! - 3 - முனைவர் தமிழப்பன்

காவிரிச் சிக்கலில் தமிழக ஆட்சியர்கள் நடந்துகொண்ட முறைகள் வெட்கக் கேடானவை; கேலிக்கூத்தானவை, தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் பட்டபாடு. இழந்த இழப்புகள் கொஞ்ச நஞ்சமா? 490 கோடி கன அடி எங்கே? அதன்பின் 390 அதுவும் குறுகி. 195 ஆனதேன்? இந்திராகாந்தி சொன்னதற்காக உச்ச நீதி மன்ற வழக்கைத் திரும்பப்பெற்ற கொடுமையால் நிகழ்ந்தது? எதனால் நிகழ்ந்தது? எதற்காக நிழகழ்ந்தது? இனவுரிமை பற்றி எள்ளளவாவது எண்ணியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருப்பார்களா? எந்த இனத்துக்காரனாவது இந்தியாவிலாகட்டும் பிற நாடுகளிலாகட்டும், தன் இனத்தைக் காட்டிக்கொடுத்திருக்கிறானா? கொடுத்திருப்பானா? தன்னலத் திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் இன உரிமையை விட்டுக் கொடுத்தவர்களை இனக்காவலர் என்று கூறும் கொடுமை இங்குத்தானே நடந்து கொண்டிருக்கிறது? அடுக்கு மொழியாலும் மயக்கு மொழியாலும் தமிழர்களை ஏமாற்றிவரும் நிலையை என்னென்பது? தமிழக மக்களை ஏமாறிகளாகவும் இளிச்ச வாயர்களாகவும் பிற மாநிலத்தவர் எண்ணச் செய்தவர் யார்? அதற்கு இடங்கொடுத்தவர் யார்? இந்த அரசியல்வாதிகளால் தானே இந்த அவப்பெயர் தமிழர்க்கு வாய்த்தது. எழுச்சி வரும் போது எதையாவது சொல்லி மழுங்கடிக்கும் செயலைச் செய்தது யார்? செய்வது யார்?

இயல்பாகவே தமிழினம் இப்படிப்பட்டது தானா? புறநானூற்று வீரமெல்லாம் போனதெங்கே? தமிழரை வழி நடத்த வாய்த்த தலைவர்கள் தடம் மாறியதால்-தடுமாறியதால் அல்லவா இந்தத் தலைக்குனிவு அரசன் எவ்வழி அவ்வழி தானே குடிகள்? தளபதியின் எண்ணப்படித்தானே படைகளின் செயற்பாடு அமையும். தமிழினத்தைலைவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் தடுக்க வேண்டிவரும் அதற்கு நாம் செய்யவேண்டியதென்ன?

நடுநிலைக் கண்ணோட்டத்தோடு அரசியற் செயற்பாடுகளை ஆட்சி நடவடிக்கைகளை ஆய்வு செய்து உண்மையை எடுத்துக்கூறும் துணிவும் நமக்கு வரவேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்ற பெருமகனின் செம்மாந்த கொள்கையை மேற்கொள்ள என்ன தயக்கம்? தயக்கமும் மயக்கமும் தமிழினத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதைத் தெளிதல் வேண்டும்.

மேலும் படிக்க

0 comments: