சமூகக் கட்டுக் கோப்பிற்குத் தனிமனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாத ஒன்று. இத்தகைய தனிமனித ஒழுக்கத்தை வற்புறுத்தும் வகையில்தான் திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை அமைத்துள்ளனர். இதன் உயர்வை அகத்துறை இலக்கியமாகிய குறிஞ்சிப் பாட்டில்,
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி யையர்க்கு மந்நிலை
எளிய வென்னார் தொல்மருங் கறிஞர்
என்று கபிலர் பாராட்டுவார்.
இத்தகைய ஒழுக்கமும் அதனைப் பேணும் நெறிகளும் தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் அறநெறிக் கோட்பாடுகளாக மலர்ச்சி பெற்றன. தமிழ் மரபு இதனை அறம் பொருள் இன்பம் என முத்திறக் கோட்பாடுகளாக வரையறை செய்துள்ளது.
இன்பம் தனிமனித வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவது. பொருள் தனிமனித வாழ்வு, சமூக வாழ்வு, அரச வாழ்வு ஆகிய அனைத்தையும் செழுமையுடன் காப்பாற்ற வல்லது. அறம் தனிமனிதன், சமூகம், நாடு என்ற அனைத்தையும் தழுவிய கட்டுக் கோப்புடன் காத்து நிற்பது. முத்திறக் கூறுகளின் இந்தப் படிமுறை வளர்ச்சியைத் தொல்காப்பியர்,
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த அய்ந்திணை மருங்கின்
என்று வரிசைப்படுத்துவார்.
மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment